தென்தாமரைக்குளம், ஜூன் 4: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை அய்யாவுக்கு பணிவிடை, திருத்தேர் அலங்கரித்தல் நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு பக்தர்களின் ‘அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா...’ என்ற பக்தி கோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பதியை சுற்றி 4 ரதவீதி வழியாக தேர் வலம் வந்தது. தேர் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு மோர், சர்பத் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வடக்கு வாசலில் அய்யாவுக்கு பக்தர்கள் சுருள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து அய்யா நள்ளிரவு வரை தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இரவு அய்யாவழி இன்னிசை நடந்தது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி, தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள், அதிகாலை 4 மணிக்கு திருக்கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி எஸ்பி நாத் உத்தரவின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.